
கடந்த 31 ஆண்டுகளாக தமிழக பத்திரிகை வரலாற்றில் தனித்த அரசியல் அடையாளத்தோடு, தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வார ஏடான சங்கொலி இதழுக்கு, முதன்முதலாக தமிழக அரசின் நூலக ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளேன். அதற்காகப் பெருமை கொள்கிறேன்.

நான், நேரடி அரசியலுக்கு வந்த இந்த குறுகிய நான்காண்டு காலத்தில் சங்கொலிக்காக மேற்கொண்ட எனது தொடர் முயற்சிகள் 2022 ஆம் ஆண்டு தொடங்கியவை.

10.12.2022 அன்று நானும் கழகக் கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ. வந்தியத்தேவன் அவர்களும், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் இல்லத்திற்குச் சென்று, சங்கொலியின் பெருமைகளை எடுத்துரைத்து, திராவிட இயக்கத்தின் கொள்கைகளை வலுவாக சுமந்து, எந்த இடைநிற்றலும் இல்லாமல், இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களை ஆசிரியராகக் கொண்டு தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கும் சங்கொலி இதழை, நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள அரசு நூலகங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எனது கோரிக்கையை எடுத்துரைத்தேன்.

அதன்பின், 10.01.2023 அன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை, கழக சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் ஏ.ஆர்.ஆர் ரகுராமன் அவர்களுடன் சந்தித்து மேற்குறிப்பிட்ட எனது வேண்டுகோளை நினைவூட்டினேன்.

பல சந்தர்ப்பங்களில், அமைச்சருக்கு எனது கோரிக்கையை நினைவூட்டிக் கொண்டே இருந்தேன்.
கடந்த 08.03.2025 அன்று, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தபோது, சங்கொலி இதழுக்கு நூலக ஆணை வழங்கிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன்.
அமைச்சர் அவர்களை சந்தித்தபோதும், முதல்வர் அவர்களை சந்தித்தபோதும், இந்த முக்கிய கோரிக்கைக்கு வலு சேர்ப்பதற்காக வேண்டி, தலைவர் வைகோ அவர்களிடமிருந்து கடிதம் பெற்று சென்றேன்.
இப்போது, பொது நூலக இயக்குனரகத்திடமிருந்து 24.04.2025 தேதியிட்ட சங்கொலி இதழுக்கான நூலக ஆணை கிடைக்கப்பெற்றது.
இந்த மகிழ்ச்சியான நேரத்தில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்புச் சகோதரர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணன் தளபதி திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும் சங்கொலி சார்பிலும், கழகத்தின் சார்பிலும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நேரடி அரசியலுக்கு வந்த இந்த நான்காண்டு காலத்தில் கழகத்தின் எல்லா தூண்களையும் கூடுதல் வலிமை உடையதாக மாற்றும் முயற்சியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறேன். அதில் ஒன்றாக சங்கொலி இதழுக்கு பெற்றுத்தந்த இந்த நூலக ஆணையை கருதுகிறேன். இது ஒரு பெருமைக்குரிய சாதனையாக நான் உணர்கிறேன்.
நமது கழகச் செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் அனைத்து ஊடகத்திற்கும் நான் முக்கியத்துவம் கொடுத்து வருகிறேன். அதில் முதன்மையானது நமது சங்கொலி இதழ். இன்னும் அதனை பொலிவுறச் செய்து, கழகத்தின் வீர வரலாற்றைச் சுமந்து தமிழ் வடிவாய்த் திகழும் சங்கொலியை உயர்த்திப் பிடிப்பேன்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
14.05.2025