திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதிகளில் சமீப நாட்களாக ஏற்பட்ட அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்களும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும் வயதானவர்களும் நோயாளிகளும் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர். இதன் காரணமாக மக்கள் மின்வாரியத்தின் மீது கோபம் கொண்டு திருவானைக்காவல் ட்ரங்க் ரோடு பகுதியில் சமீபத்தில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து காவல்துறையினர் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக 25 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். இதுவும் பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது என்றே கூற வேண்டும்.

ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் முனைவர் வல்லூறு மோகன் ராம் அவர்கள் உடனடியாக இந்த பிரச்சனையில் தலையிட்டு துரிதமாக செயல்பட்டு பொது மக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யுமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த தொடர் அறிவிக்கப்படாத மின்வெட்டிற்கான காரணம் குறித்து நாம் ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது கடந்த ஆண்டு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு அமைக்கப்பட்டிருந்த உயர் அழுத்த மின் கோபுரம் ஆற்று நீரில் அடித்து செல்லப்பட்ட காரணத்தினால் மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அதை கூடிய விரைவில் சரி செய்த விடுவதாகவும் நம்மிடையே கூறினார்கள்.

நாம் செய்தி வெளியிட்ட ஒரு சில நாட்களிலேயே மின்வாரிய அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை எடுத்து உயர் மின் அழுத்த கோபுரத்தை அமைக்கும் பணியினை தொடங்கியுள்ளார்கள்.
தகவல் அறிந்த நாம் உடனடியாக அந்த உயர் மின்னழுத்த கோபுரங்கள் உள்ள பகுதிக்கு நேரடியாக சென்று கள ஆய்வு செய்தோம். உயர் அழுத்த மின் கோபுரங்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஒருங்கிணைக்கும் பணி நடைபெற்ற வருகின்றது.

உடனடியாக நாம் ஸ்ரீரங்கம் மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது மிக விரைவில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைக்கும் பணி தொடங்கிவிடும் என்றும் மிக விரைவாக ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் பகுதி மக்களின் மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் என்றும் இனி தொடர் மின்வெட்டு என்பது இருக்காது எனவும் உறுதி கூறினார்கள்.
இது தொடர்பாக நமக்கு பேட்டி அளித்த ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கத்தின் தலைவர் மோகன்ராம் இந்த தொடர் மின்வெட்டினால் பொதுமக்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டு வந்தனர் இவற்றை உடனடியாக சரி செய்ய நாம் மின்வாரிய அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்திருந்தோம் போர்க் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்த
தலைமை பொறியாளர் தென்னூர் திருச்சி
மேற்பார்வை மேற்பார்வை பொறியாளர் மன்னார்புரம் திருச்சி
ஸ்ரீரங்கம் கோட்ட செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்கள் மற்றும் மின் வாரிய பணியாளர்கள் ஆகியோருக்கு ஸ்ரீரங்கம் மக்கள் நல சங்கம் சார்பாகவும் பொதுமக்கள் சார்பாகவும் தன் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக கூறினார்.
புகார் அளிக்கப்பட்ட உடனேயே நாம் துரிதமாக களத்தில் இறங்கி மின்வாரிய அதிகாரிகளிடம் இது தொடர்பாக கேள்விகளை எழுப்பி அவர்களும் போர்க்கால அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு பொதுமக்களின் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை நியூ திருச்சி டைம்ஸ் மனதார பாராட்டுகின்றது. இவர்களைப் போன்ற நல்ல அதிகாரிகள் மக்களுக்கு கிடைப்பது என்பது மிகப்பெரிய வரம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்து பொதுமக்களின் மின் தேவைகளை பூர்த்தி செய்யும் மின்வாரிய செயற்பொறியாளர்கள் உதவி செயல் பொறியாளர்கள் உதவி மின் பொறியாளர்கள் மின்வாரிய பணியாளர்கள் அனைவருக்கும் நியூ திருச்சி டைம்ஸ் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு என்றென்றும் அவர்களுக்கு பக்கத்துணையாக நாம் இருப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.