பேசும் படம்
விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளருக்கு தனது நாற்காலியை வழங்கிய எம்.பி.
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்துக்கு நேற்று (14.04.2025) திங்கள்கிழமை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சக்திவேல் (எ) ஆற்றலரசு மற்றும் கட்சியினர் வந்தனர்.
பல்வேறு பொதுநலக் கோரிக்கை மனுக்களை திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களிடம் வழங்கிட, ஐம்பதுக்கும் மேற்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஒரே நேரத்தில் வந்துவிட்டதால், இருந்த நாற்காலிகளில் முடிந்தவரை அமருங்கள் எனக்கூறிவிட்டு தனது நாற்காலியில் விடுதலைச் சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் ஆற்றலரசுவை அமரவைத்தார் எம்.பி. துரை வைகோ.
வி.சி.க. மாவட்டச் செயலாளர் எவ்வளவோ மறுத்தும், அவரை விடாப்பிடியாக அழுத்தி அமரவைத்துவிட்டார் அவர்.
எல்லோருக்கும் நாற்காலிகள் இல்லை என்பதால், நான் நின்று கொண்டு பேசுகிறேன். நீங்கள் அனைவரும் களப்பணியாற்றி என்னை வெற்றி பெறச் செய்திருக்கிறீர்கள். இந்த நாற்காலியில் நீங்களும் அமர உரிமை உண்டு என்றார் அவர்.
மேலும், வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இளைஞர்களிடம், 30 நிமிடங்களுக்கும் மேல் நின்று கொண்டே எம்.பி. துரை வைகோ அவர்கள் கனிவாகப் பேசினார்.
உங்கள் கோரிக்கைகளில் எவையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ, அவற்றை உடனடியாக நிறைவேற்றுகிறேன் என்ற உறுதியையும் அவர்களுக்கு வழங்கினார்.
எம்.பி. துரை வைகோ அவர்களுடன் நடந்த இந்த அன்பான சந்திப்பைத் தொடர்ந்து, வந்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் மிகவும் நெகிழ்ந்து…மகிழ்ந்து போனார்கள்.
சமத்துவத்தையும்.. சமூகநீதியையும் நிலைநாட்டிடும் திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களின் நெகிழ்ச்சி சம்பவத்தைக் கேட்டு, அனைத்துத் தரப்பினரும் அவரைக் கொண்டாடி மகிழ்கின்றனர்.
