
திருச்சியில் ஊராட்சி நிதியில் பல லட்சம் முறைகேடு செய்த திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியம், திருமலைசமுத்திரம் குக்கிராமத்தில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் கீழ்
ஐல் ஜீவன் மிஷன் – 2022-23 திட்டத்தில் ரூபாய் 10.25 லட்சம் திட்ட மதிப்பீட்டில் 130 வீடுகளுக்கு பைப் லைன் விஸ்தரிப்பு செய்தல் மற்றும் குடிநீர் குழாய் (FHTC) இணைப்பு வழங்குதல் பணிகள் நடைபெற்று குடிநீர் வினியோகம் முறையாக வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் மேற்படி குடிநீர் பைப் லைனில் பழுது ஏற்பட்டால் மட்டுமே ஊராட்சி நிர்வாகம் சார்பில் பணிகள் செய்ய வேண்டும் என்ற அரசின் விதி இருந்தும் திருமலைசமுத்திரம் கிராம ஊராட்சி செயலாளர் இளங்கோ என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் திட்ட அனுமதி பெறாமலும் மற்றும் தொழில்நுட்ப அனுமதி எதுவும் பெறாமல் ஊராட்சி நிதியை கையாடல் செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் பழுது ஏற்படாத குடிநீர் குழாய்களை உயர் அதிகாரிகளுக்கு உரிய தகவல் தெரிவிக்காமல் தன்னிச்சையாக ஜே.சி.பி. இயந்திரத்தை கொண்டு அகற்றி புதிதாக ஊராட்சி நிதியிலிருந்து பல லட்சம் செலவு செய்து குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை செய்து வருகின்றார்.
கிராம ஊராட்சிகளில் புதிதாக பணிகள் எதுவும் செய்ய வேண்டும் என்றால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் ஊராட்சி உதவி இயக்குனரிடம் உரிய அனுமதி பெறுவது என்ற விதி இருந்தும் திருமலைசமுத்திரம் ஊராட்சி செயலாளருக்கு ஆளுங்கட்சி பிரமுகரின் நெருங்கிய தொடர்பு இருப்பதை பயன்படுத்திக் கொண்டு ஊராட்சி நிதியை கடந்த மூன்று மாதங்களாக கையாடல் செய்து வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மணிகண்டம் ஒன்றிய பகுதியிலுள்ள கிராம ஊராட்சி நடைபெற்ற முறைகேடு சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம் தொலைபேசி வாயிலாக தகவல் கேட்டால் உரிய பதில் தெரிவிக்காமல் இருந்து வருகின்றார்.
திருச்சி மாவட்ட ஆட்சியரும் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரும் இம் முறைகேடு தொடர்பாக விரைந்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.