
ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பது போல திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அந்தநல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தரசநல்லூர் தாமரைக் குளம் பகுதியில் முழுமையான சாலை வசதி இல்லாமல் குண்டும் குழியுமாக மோசமாக பல வருடங்களாக இந்தச் சாலை இப்படித்தான் உள்ளதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

மழைக்காலங்களில் குண்டு குழிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இரு சக்கர வாகனத்தில் சாலையை கடப்பது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி பலமுறை அந்தநல்லூர் அதிகாரிகளிடம் முறையிட்டும் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டு புகார் தெரிவித்தும் பல வருடங்களாக இந்த சாலைக்கு தீர்வு காணப்படவில்லை என்று புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் முத்தரசநல்லூர் மற்றும் பழூர் பகுதியை இணைப்பது இந்த சாலை தான். இந்த நவீன யுகத்தில் எவ்வளவோ மாற்றங்கள் அறிவியல் ரீதியாக நடந்தாலும் திருச்சி மாவட்டத்திற்கு மிக அருகாமையிலேயே இருக்கும் இந்த ஊராட்சியில் இப்படிப்பட்ட சாலை இருப்பது வியப்பாக தான் உள்ளது.

ஊராட்சி மன்ற தலைவர்கள் இல்லாத சூழ்நிலையில் அந்தநல்லூர் அதிகாரிகள் தலையிட்டு இந்த சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். நடவடிக்கை எடுப்பாரா அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அதிகாரி…..