
திருச்சி ஜூன் 13
மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தண்ணீர் திறந்து வைத்தார். மேட்டூரில் இருந்து பொங்கி வரும் காவிரி நீர், கரூர் மாவட்டம் மாயனூர் கதவணையை நேற்று வந்தடைந்தது. இன்று திருச்சி முக்கொம்பு மேலணைக்கு வந்தது. மேலணைக்கு வந்த காவிரி நீரை விவசாயிகள் நெல் மணிகள் மற்றும் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்றனர்.

இதற்காக முக்கொம்பு சுற்றுலா தல நுழைவு வாயிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக சென்றனர். முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி தாய் மற்றும் கரிகாலன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து காவிரிக்கு படையல் வைத்து பூஜைகளை செய்தனர்.

இதுதொடர்பாக விவசாயிகள் கூறும்போது, “குறுவை பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதி சரியான நேரத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. கர்நாடக அரசுடன் தமிழக அரசு பேசி தண்ணீர் பெறுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் குவின்டாலுக்கு ரூ.2500 ரூபாய் அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சியே. ஆனால், அது மிகவும் குறைவான தொகையாக உள்ளது.

நெல் கொமுதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 70 சதவிகிதம் நிறைவடைந்துள்ளன. கடந்த ஆண்டு விட சிறப்பாக தூர்வாரும் பணிகள் அனைத்தும் நடந்துள்ளது. காவிரியின் கடைமடை வரை தண்ணீர் சேர்ந்த சேரும் என்கிற நம்பிக்கை உள்ளது. மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என விவசாயிகள்” என்று தெரிவித்தனர்.

மேலணை வந்தடைந்த காவிரி தண்ணீர் இன்று மாலைக்குள் கல்லணையை சென்று அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா பாசனத்திற்காக கல்லணையை நாளை திறந்து வைக்கிறார் என்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து கடைமடைப் பகுதிகளுக்கு ஓரிரு நாட்களில் தண்ணீர் சென்றுவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்கிற வலியுறுத்தல்கள் எழுந்துள்ளன.
