
முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி..
இதற்கு ஒவ்வொருவரும் உழைப்பும் ஒத்துழைப்பும் தந்து சிறப்பித்தமைக்கு இந்துமுன்னணி சார்பில் மனதார நன்றி தெரிவிக்கிறோம்..
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அவர்களின் பத்திரிகை அறிக்கை..

22-06-2025 அன்று மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாடு மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்க எத்தனை இடையூறுகள், பிரச்சனைகள் விமர்சனங்கள், சட்டப்பிரச்சனைகளை எழுப்பிய போதும் அவற்றையெல்லாம் பற்றி சிறிதும் கவலைப்படாமல் தொடர்ந்து மக்களை சந்தித்து அழைப்பிதழ் தந்து வரவேற்றும், மேலும் மாநாட்டு திடலிலும் இரவு பகல் பாராது இந்து இயக்கத் தொண்டர்கள் உழைத்தனர்.

இந்து வழக்கறிஞர்கள் சட்டரீதியாக போராடி தடைகள் நீங்க பாடுபட்டனர்.
அனைத்து சம்பிரதாயங்களை சேர்ந்த போற்றுதலுக்குரிய 380 துறவிகள் மாநாட்டில் எழுந்தருளி ஆசி வழங்கினர்.

மேலும் நமது அழைப்பை ஏற்று வருகை தந்து சிறப்பித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள். சமுதாய தலைவர்கள், ஆன்மீக குழுவினர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்கள், ஆர்எஸ்எஸ் துணை அமைப்பின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு அமைப்பு தலைவர்கள்..
அறுபடை முருகன் அருட்காட்சியை தரிசிக்க வந்து சிறப்பு சேர்த்த ஆளுநர்கள் மற்றும் மத்திய அமைச்சர், திரையுலக பிரபலங்கள் ஆகியோர்..
மாநாட்டில் உரை நிகழ்த்திய கௌமார மடத்தின் சுவாமிகள், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஆர்எஸ்எஸ் தென்பாரத பொறுப்பாளர் டாக்டர் வன்னியராஜன், ஆந்திர மாநில துணை முதல்வர் மாண்புமிகு பவன் கல்யாண், ஆகியோருக்கு இந்து முன்னணி சார்பில் மனதார நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

பலவித சிரமங்களுக்கிடையிலும் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்த லட்சோப லட்சம் இந்து குடும்ப சொந்தங்களுக்கு பாசமிகு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
மாநாட்டு அரங்கம், அறுபடை வீடு அருட்காட்சி அரங்கம் ஆகியவை நிறுவிய கலைஞர்கள், நிகழ்ச்சியில் அருமையாக நடனம் ஆடி பிரமிக்க வைத்த நடன கலைஞர்கள், இசை கலைஞர்கள், மருத்துவ குழுவினர் ஆகியோருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாநாட்டு செய்திகளை, அருட்காட்சி பெருமைகளை மக்களுக்கு கொண்டு சென்று கந்த சஷ்டி கவசத்தை உலகம் முழுவதிலும் ஒரு கோடி பேர் சேர்ந்து பாடவும், கண்டு களிக்கவும் காரணமாக இருந்த ஊடகத்தினருக்கும், பாதுகாப்பு, ஒத்துழைப்பு நல்கிய காவல்துறையினர், அரசு அதிகாரிகள் ஆகியோருக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த மாநாடு மற்றும் ஆறு நாட்கள் நடந்த அறுபடை வீடு அருட்காட்சி ஆகியவை குறித்து எல்லா தரப்பினரும் பெருமையாக பெருமிதமாக கருத்து தெரிவித்துள்ளனர். இத்தகைய மாபெரும் நிகழ்ச்சி மிக நேர்த்தியாக, எழுச்சியுடன், கட்டுப்பாடு, ஒழுங்கு பிரமிக்க வைத்துள்ளது. இத்தகைய பண்பாடுகள் ஒவ்வொரு பக்தரின் உள்ளத்தில் இருந்து வெளிப்பட்டது. இதற்கு முழு முதல் காரணம் இந்துக்களிடம் இருக்கும் ஆழ்ந்த பக்தி சிரத்தை, அந்த பக்தியின் ஒருங்கிணைந்த சக்தியாக வெளிப்பாடாகியுள்ளது. தமிழகத்தின் திருப்புமுனையாக இந்த முருக பக்தர்கள் மாநாடு அமைந்துள்ளது.
எதாவது குறை காண முடியாதா என்று இந்து விரோத சக்திகள் விமர்சனம் செய்கின்றனர். நாத்திகம் என்பது வேறு இந்து விரோதம் என்பது வேறு என்பதை தெள்ளத் தெளிவாக மாநாடு எடுத்துக்கூறி புரிய வைத்தது.
எந்த ஒரு தனி மனிதரையும் எப்போதும் எங்கும் விமர்சனம் செய்யாது இந்து முன்னணி. அதேசமயம் இந்துக்களின் நம்பிக்கைகளை அநாகரிகமாக பேசினால் எதிர்க்கவும் தயங்காது. இந்து ஆன்மீகத்தை போற்றவும் இந்து சமயத்தை பாதுகாக்கவும் இந்த மாநாடு மூலம் உலகம் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொரு இந்துவும் ஒருங்கிணைந்து கந்த சஷ்டி கவசம் பாடியதன் மூலம் உறுதி செய்துள்ளனர்.
நமது முருக பக்தர்கள் மாநாடு மாபெரும் வெற்றி பெற்று இந்து தர்மத்தின் இந்துக்களின் நற்பண்பை உலகம் அறிய அருளிய நம் அன்பு தெய்வமான முருக பெருமானின் பாதத்தில் காணிக்கையாக்குகிறோம்.