
கடந்த 18.08.2025 அன்று, மாண்புமிகு ஒன்றிய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர் திரு. சர்பானந்த சோனோவால் அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சியில் உலர் துறைமுகம் (உள்நாட்டு கொள்கலன் கிடங்கு) அமைப்பதற்கான கோரிக்கையை வலியுறுத்தி, இது தொடர்பான வேண்டுகோளை முன்வைத்தேன்.
இதன் தொடர்ச்சியாக, திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு இந்த உலர் துறைமுகத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு, இன்று (20.08.2025) மாண்புமிகு ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு. நிதின் கட்கரி அவர்களையும்,

மாண்புமிகு ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு. பியூஷ் கோயல் அவர்களையும் அவர்களது அலுவலகங்களில் தனித்தனியாக சந்தித்து, இக்கோரிக்கையை முன்வைத்து விவரங்களை எடுத்துரைத்தேன்.
தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சி, சிறந்த விமான, சாலை மற்றும் இரயில் இணைப்புகளைக் கொண்டிருப்பதால், உலர் துறைமுகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக உள்ளது. திருச்சியில் ஏற்றுமதி தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலர் துறைமுகம் அமைக்கப்பட்டால், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதுடன், நிலையான ஏற்றுமதி வளர்ச்சியை ஆதரிக்கவும் உதவும் என வர்த்தக அமைப்புகள் வழங்கிய குறிப்புகளை சுட்டிக்காட்டினேன்.
மேலும், மனப்பாறை அருகே உள்ள SIPCOT தொழிற்பூங்கா அல்லது நெடுஞ்சாலை இணைப்பு கொண்ட பிற இடங்களில் 100 ஏக்கர் நிலத்தை இதற்காக அடையாளம் காண முடியும் என ஏற்றுமதி-இறக்குமதி கூட்டமைப்புகள் தெரிவித்துள்ளன என்று விளக்கினேன்.
இவற்றைக் கருத்தில் கொண்டு, திருச்சியில் உலர் துறைமுகம் அமைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இரு அமைச்சர்களிடமும் வேண்டுகோள் விடுத்தேன்.
இந்த உலர் துறைமுகம், திருச்சி தொகுதியின் தொழில் வளர்ச்சிக்கு நிரந்தரமான அடித்தளமாக அமையும் என நம்புவதாகவும், இதற்கு தேவையான முன்னெடுப்புகளை அவர்களது அமைச்சகங்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
இக்கோரிக்கை தொடர்பாக, அன்றும் இன்றும் நான் சந்தித்த மூன்று அமைச்சர்களும் ஆதரவான பதில்களையே வழங்கியுள்ளனர். இதனால், இந்த முயற்சி வெற்றியடையும் என மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளேன்.
அன்புடன்,
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்,
மறுமலர்ச்சி திமுக
20.08.2025,
புதுடெல்லி