
திருச்சி மாவட்டம். மணப்பாறை ஊராட்சி ஒன்றியம். மொண்டிப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமானது ஒண்டிப்பட்டி குளம்.
இந்த குளத்திற்கு செல்லும் பிரதான வாரியில் மிகவும் பழமை வாய்ந்த வேப்ப மரங்கள் மற்றும் ஆவி மரங்கள்,உசிலை மரங்கள் இருந்தன. இதன் மதிப்பு பல லட்ச ரூபாய் ஆகும்.

இந்த நிலையில், திடீரென மர்ம கும்பல் ஒன்று வாரியில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திலிருந்த வேப்பமரங்கள், ஆவி மரங்களை வெட்டி திருட்டுத்தனமாக கடத்தியுள்ளது. இதன் மதிப்பு பல லட்ச ரூபாயாகும். ஐந்து மற்றும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒண்டிப்பட்டி ஊராட்சி வளர்ச்சிக்காக இப்பகுதியில் உள்ள மரங்களை பொது ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை ஊராட்சி வைப்பு நிதியில் வைப்பது வழக்கம்.

ஆனால் பத்து ஆண்டுகளாக இந்த ஊராட்சி சார்பாக எந்த ஏலமும் விடப்படாத நிலையில், திடீரென்று அனைத்து மரங்களும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், ஊராட்சிக்கு சொந்தமான பொது இடங்களில் உள்ள அனைத்து மரங்களையும் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

மேலும், பழமையான மரங்களை வெட்டி கடத்திய திருட்டு கும்பல் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க இப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



