திருச்சியின் மிகவும் பிரபலமான உணவகங்களில் ஒன்றான ஏழாம் சுவை சுவையான உணவுகளுக்கு பிரசித்தி பெற்ற உணவகம் ஆகும்.

மற்ற உணவகங்களை விட விலை இங்கு சற்று கூடுதலாக இருந்தால் கூட இவர்களின் சுவை என்பதை இன்றுவரை எந்த ஒரு உணவகத்தினாலும் ஈடு செய்ய இயலாத ஒன்றாக இருந்து வந்தது.
ஆனால் இன்றோ நிலைமை தலை கீழ். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமல்லாமல் திருச்சிக்கு விஜயம் செய்யும் அனைவருமே தேர்ந்தெடுத்து உணவு உண்ண செல்லும் பிரதான உணவகங்களில் சிறந்த உணவகமாக இருந்த ஏழாம் சுவை இன்று தன்னுடைய அறுசுவைகளையும் இழந்து சாதாரண தெருவோர கடைகளில் கிடைக்கும் சுவையில் கூட உணவுகளை தர இயலாமல் தன்னுடைய வாடிக்கையாளர்களை மெல்ல மெல்ல இழக்கத் தொடங்கியுள்ளது.
பரோட்டா சாப்பிடும் ஆசையில் இன்று ஏழாம் சுவை உணவகத்திற்கு சென்று வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான புரோட்டாக்கலையும் கூடவே சைடு டிஷாக பன்னீர் மஞ்சூரியன் மற்றும் மஸ்ரூம் மஞ்சூரியன் ஆகியவற்றை ஆர்டர் செய்தேன்.
விலைப்பட்டியலை பார்க்கும் பொழுது என்னதான் தலையை சுற்றினாலும் தருவது ஏழாம் சுவை அதனால் அறுசுவைக்கு மேலே ஏழாவதாக ஒரு சுவை இங்கு உண்டு என்கின்ற அதீத நம்பிக்கையில் பில்லில் காட்டிய கட்டணத்தை செலுத்தி விட்டு வாசலில் காத்திருந்து ஒரு மணி நேரம் கழித்து என்னுடைய பார்சலை பெற்றுச் சென்றேன்.
மிகவும் ஆவலோடு பார்சலை பிரித்து உண்ணத் தொடங்கிய பொழுது தான் தெரிந்தது இந்த கடையில் அறுசுவை அல்ல ஒரு சுவை கூட இல்லாத அளவிற்கு தரம் மிக மிக அதல பாதாளத்திற்கு சென்று விட்டது என்கின்ற உண்மை. ஆம் அவர்கள் தந்த பரோட்டா லாரியின் டயரை போல அவ்வளவு கடினமாக ரப்பரை போல மெல்லவே முடியாத வகையில் இருந்தது. அதற்கு அவர்கள் தந்த குருமாவோ காவிரி ஆற்றை போல வெள்ளமென ஓடியது. அந்த குருமாவில் சுவையோ மணமோ எதுவுமே கிடையாது. வெந்நீரில் உப்பு மஞ்சள் தூளை தூவியது போல அதன் சுவை இருந்தது. வேண்டா வெறுப்பாக வேறு வழி இல்லாமல் 750 ரூபாய் கொடுத்து உணவை வாங்கி விட்டோமே என்கின்ற ஆதங்கத்தோடு தலையில் அடித்துக் கொண்டு புரோட்டாவை தலையை சுற்றி வீசி எறிந்து விட்டு அங்கிருந்து வாங்கி வந்த மஸ்ரூம் மஞ்சூரியனையும் பனீர் மஞ்சூரியனை மட்டும் வைத்துக் கொண்டு வீட்டிலேயே சப்பாத்தியை தயார் செய்து சாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளிவிட்டனர் இந்த ஏழாம் சுவை உணவகத்தினர்.
இப்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வித்தையை இவர்கள் எங்கிருந்து கற்றுக் கொண்டார்களோ அது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.

எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள் ஆனால் அன்போடு பரிமாறுங்கள் என்பது பழமொழி. அதற்காக காசை கொடுத்து இந்த தண்ட உணவை வாங்கி வீதியில் கொட்டும் அவல நிலைக்கு வந்ததை எண்ணி எண்ணி ஆற்றாமையில் பொங்கும் நிலைக்குத் தள்ளிட்டனர் இந்த எட்டாத சுவையை கொண்டுள்ள உணவகத்தினர்.