
இன்று (22.02.2026) மதியம் 12 மணி அளவில், திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியும், சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உள்பட்ட பழூர் மற்றும் பெட்டவாய்தலை ரயில்வே சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதாக பொதுமக்கள் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, அப்பகுதிகளில் துரை வைகோ எம்.பி நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
பழூர் சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காமல் இருக்க, குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் மோட்டார் மூலம் தேங்கும் நீரை வெளியேற்றுவதை உறுதி செய்யவும், அங்கு உருவாகியுள்ள ஊற்றை உடனடியாக சரிசெய்யவும் ரயில்வே அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார் துரை வைகோ எம்.பி.
அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து, பெட்டவாய்தலை ரயில்வே சுரங்கப்பாதையிலும் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கும் தண்ணீர் தேங்காமல் இருக்க தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார் துரை வைகோ எம்.பி. அதற்கும் உடனடியாக தீர்வு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
மேலும், பொதுமக்கள் கோரிக்கையின்படி அருகிலுள்ள ரயில்வே பகுதி வழியாக செல்லும் கழிவுநீர் பாதையை சீரமைக்க, ரயில்வே துறை அனுமதி வழங்க வேண்டும் என்று அங்கு வந்திருந்த பேரூராட்சித் தலைவர் அவர்கள் துரை வைகோ விடம் கேட்டுக்கொண்டதை தொடர்ந்து, உடனடியாக அனுமதி வழங்குமாறு ரயில்வே அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இன்றைய கள ஆய்வு பயனுள்ளதாக நிறைவடைந்ததாக நம்பிக்கை தெரிவித்தார் துரை வைகோ எம்.பி.
இந்த கள ஆய்வின்போது சேலம் ரயில்வே கோட்ட உயர் அதிகாரிகள் மற்றும் சிறுகமணி பேரூராட்சி மன்றத் தலைவர் சிவகாம சுந்தரி, மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராஜலிங்கம், மறுமலர்ச்சி திமுக மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், சிறுகமணி பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் என பலரும் பங்கேற்றனர்.




