ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை மீட்க மிக அவசர வேண்டுகோளுக்காக வெளியுறவுத்துறை செயலாளர் திரு. விக்ரம் மிஷ்ரி அவர்களை மீண்டும் இன்று (04.08.2025) மதியம் 2:30 மணியளவில் சந்தித்தேன்.
மருத்துவ மாணவர் கிஷோர் சரவணனை ரஷ்ய – உக்ரைன் போர்முனையிலிருந்து மீட்க கோரி எனது தொடர் போராட்டத்தில் இன்று பிரதமரை சந்தித்துவிட்டு, உடனே வெளியுறவுத்துறை செயலாளரை சந்தித்தேன்.
அப்போது, மாணவரிடமிருந்து கிடைத்த துயரமான தகவலால் இந்த விவகாரம் மேலும் மிக மோசமான நிலையை எட்டியிள்ளது என்பதை தெரிவித்தேன்.
கடந்த 31.08.2025 அன்று மாலை, கிஷோர் தனது குடும்பத்தினரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தன்னை ஆகஸ்ட் 2 அன்று போர்முனைக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உக்ரைன் கட்டுப்பாட்டில் இருந்து, இப்போது ரஷ்யப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள மரியுபால் என்ற பகுதியில் பயிற்சி பெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தனக்கு ஸ்டெராய்டுகள் மற்றும் அறியப்படாத மருந்துகள் செலுத்தப்பட்டதாகவும் அவர் தனது பெற்றோரிடம் கவலைப்பட்டுள்ளார்.
கடந்த 15.07.2025 அன்று இந்திய தூதரகத்தில் திரு. பவேஷைத் தொடர்பு கொண்டு, தனது இருப்பிடம் மற்றும் அன்றைய நிலை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் தன் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
என்ற அனைத்து விவரங்களையும் வெளியுறவுத்துறை செயலாளரிடம் தெரிவித்து, நமக்கு உள்ள நேரம் மிக விரைவாக சென்று கொண்டிருப்பதை எடுத்துக்கூறி, இந்த இளம் மாணவர் போர்க்களத்தில் நிறுத்தப்படுவதைத் தடுக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும்,
இந்த பிரச்சனையை தூதரகம் மூலம் ரஷ்ய அதிகாரிகளிடம் உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டேன்.
ஒன்றிய அரசு கிஷோர் சரவணனை பாதுகாப்பாகவும் விரைவாகவும் திருப்பி அழைத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் இதே போன்ற வற்புறுத்தல்களை எதிர்கொள்ளும் மற்ற இந்தியர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன்.
இந்த விவகாரத்தை அதன் முக்கியத்துவம் கருதி, மிக அவசரமாகவும், தீவிரமாகவும் கருதுமாறு கேட்டுக்கொண்டேன்.
ஏற்கனவே இந்தியாவிற்கான ரஷ்ய தூதரிடம் இந்த பிரச்சனையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கையினை கோரியுள்ளதாக கூறிய அவர், இந்த பிரச்சனையில் இப்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மற்றும் அவசர நிலையை கருத்தில் கொண்டு மீண்டும் இதற்கான துரித நடவடிக்கையில் ஈடுபடுவதாக உறுதியளித்தார்.
அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
04.08.2025
புதுடெல்லி


