
திருச்சி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக துரை வைகோ வெற்றி பெற்ற ஒன்றரை ஆண்டுகளில், பல்வேறு மக்கள் நலப்பணிகளைச் செய்து வருகிறார்.
அதில், இன்று பெரும் மகிழ்ச்சியான செய்தி, அவரது கோரிக்கையை ஏற்று மத்திய ரயில்வே துறையின் உத்தரவின்படி, சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் நின்று சென்றது. திருவெறும்பூர் மக்களுடன், துரை வைகோ வும் இணைந்து அந்த ரயிலை வரவேற்று மகிழ்ந்தார்.

திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை மனுவினை, 12.12.2024 அன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடம் வழங்கினார். தொடர்ந்து 18.12.2024 அன்று மத்திய இரயில்வே அமைச்சர் அலுவலகத்தில் மாண்புமிகு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களைச் சந்தித்து இதே கோரிக்கை மனுவைக் கொடுத்தார் துரை வைகோ MP.

மேலும், கடந்த 2025-ஆம் ஆண்டு துவக்கத்தில் ஜனவரி 4-ஆம் தேதி மீண்டும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார் துரை வைகோ. இதனைத் தொடர்ந்து 27.03.2025 அன்று தென்னக ரயில்வே பொது மேலாளரைச் சந்தித்து, திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயில் நிற்க வேண்டிய அவசியத்தை விளக்கி கோரிக்கை மனு வழங்கினார். 14.07.2025 அன்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரைச் சந்தித்து இதே கோரிக்கை மனுவினை வழங்கி வலியுறுத்தினார் துரை வைகோ.

10.12.2025 அன்று நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தின் போது, இதே கோரிக்கையை எழுப்பி இரயில்வே அமைச்சரின் எழுத்துப்பூர்வ பதிலையும் பெற்றார் துரை வைகோ MP.

இவ்வளவு தொடர் முயற்சியின் காரணமாக இன்று பகல் 12.30 மணிக்கு, திருச்சியில் இருந்து சென்னை சென்ற சோழன் விரைவு ரயில் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்போது மறுமலர்ச்சி திமுக தோழர்கள் மற்றும் திருவெறும்பூர் பகுதி மக்களுடன் இணைந்து சோழன் விரைவு ரயிலின் மீது மலர் தூவி வரவேற்றார் துரை வைகோ MP.

நாகசுரம், மேள தாள இசைக்கு மத்தியில் எழுந்த வாழ்த்து முழக்கங்களுக்கிடையில், ரயில் ஓட்டுநர்களுக்கு பட்டாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் வரவேற்றார்.

அதே ரயிலில் திருவெறும்பூரில் இருந்து தஞ்சாவூர் ரயில் நிலையம் வரை பயணிகளுடன் சென்றார். ரயில் பயணிகள் திருவெறும்பூரில் சோழன் விரைவு ரயிலை நிறுத்தியதற்கு உளமாற துரை வைகோவிற்க்கு நன்றி தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதன்பின்னர், சென்னையில் இருந்து திருச்சி நோக்கி பிற்பகல் வந்த சோழன் விரைவு ரயிலில் பயணித்து, பயணிகளுடன் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டு, மீண்டும் திருவெறும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தார் துரை வைகோ MP.

இந்த மகிழ்ச்சியின் ஊடே, ரயில் பயணிகள் சங்கத்தினர், திருவெறும்பூர் குடியிருப்பு சங்க நிர்வாகிகள் அனைவரும் அவரது இந்த தொடர் முயற்சிக்கு நன்றி தெரிவித்து பயனாடைகள் அணிவித்தனர்.
இதேபோல, ஏற்கனவே திருச்சி – தாம்பரம் செல்லும் சிறப்பு ரயில் அவரது தொடர் முயற்சி காரணமாக 15.10.2025 அன்று திருவெறும்பூரில் நின்று சென்றது. அந்த சிறப்பு ரயிலையும் திருவெறும்பூர் மக்களுடன் இணைந்து, மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்று தஞ்சாவூர் வரை பயணம் மேற்கொண்டார் துரை வைகோ MP.

இன்று திருவெறும்பூர் தொகுதி மக்களுடன் சேர்ந்து, தித்திப்பான பொங்கல் திருவிழா போன்ற நிகழ்வில் பங்கேற்றதைப் போல சோழன் விரைவு ரயிலை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தார்.

செய்தியாளர்களிடையே தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய துரை வைகோ MP கூறியதாவது :
என் நாடாளுமன்றப் பணிகளில் மக்களுக்கு பயனுள்ள இதுபோன்ற தொடர் முயற்சிகள் பலனளிக்கும் போது, அவர்களை விட நான் பெரிதும் திருப்தியடைந்தவனாக உணர்கிறேன் . இவ்வாறு அவர் கூறினார்.

திருவெறும்பூர் ரயில் நிலைய வரவேற்பில் மதிமுக துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொகையா, மாவட்டச் செயலாளர்கள் வெல்லமண்டி இரா.சோமு, மணவை தமிழ்மாணிக்கம், டி.டி.சி.சேரன், புதுக்கோட்டை கலியமூர்த்தி, பெரம்பலூர் ஜெயசீலன், அரியலூர் இராமநாதன் மற்றும் திரளான கட்சி நிர்வாகிகள் பங்கேற்று, அவருடன் தஞ்சாவூர் வரை பயணம் மேற்கொண்டனர்.
அதேபோல, தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் மாவட்டச் செயலாளர் வி.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் துரை.சிங்கம், கும்பகோணம் மாநகரச் செயலாளர் கோ.சரவணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் வரவேற்பு தந்தனர்.



