நந்தவனம் குடியிருப்புவாசிகளுக்கு அடிமனை வாடகை ரசீது வழங்கிட திருச்சி எம்.பி. துரை வைகோ கோரிக்கை -அறநிலையத் துறை அமைச்சருக்குக் கடிதம்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி, திருவரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட திருப்பராய்த்துறை ஊராட்சி, நந்தவனம் அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான சர்வே எண் 172/2-இல் 35 குடும்பங்கள் சிறிய வீடுகள் அமைத்து, கடந்த பதினைந்து வருடங்களாக வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புகளில் சுமார் நூறு பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அடிப்படை வசதிகளான மின்சாரம், குடிநீர் வசதி இதுவரை செய்துதரவில்லை.

அதற்கு அறநிலையத்துறைக்கு உள்பட்ட திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயில் நிர்வாகம் அடிமனை வாடகை ரசீது வழங்க வேண்டும். இதுதொடர்பாக அப்பகுதி மக்களுக்கு கடந்த 2022-ஆம் ஆண்டு ஒவ்வொரு வீடுகளுக்கும், ஒரு குறிப்பிட்ட தொகையை வாடகை நிர்ணயம் செய்து, அத்தொகையை கட்டுவதற்கு கோயில் நிர்வாக அலுவலர் அறிவிப்பு ஆணை அனுப்பியுள்ளார். பொதுமக்கள் தரப்பில் இருந்து தவணை அடிப்படையில் அந்தத் தொகையை கட்டுவதற்கு விருப்பம் தெரிவித்தும், அதுகுறித்து உரிய நடவடிக்கை இல்லாத நிலை உள்ளது.

எனவே, இதுகுறித்து திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களைச் சந்தித்து சமூக ஆர்வலரும், ஊடகவியலாளருமான சங்கரராமன் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை மனு வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களை அனுப்பி நிலைமையை ஆய்வு செய்திட எம்.பி. பணித்தார். இதனையடுத்து, மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், ஊடகவியலாளர் சங்கரராமன், மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ் ஆகியோர் அப்பகுதி மக்களைச் சந்தித்து, அவர்களின் கோரிக்கை தொடர்பாக எம்.பி.துரை வைகோ அவர்கள் அனுப்பிய விபரங்களைக் கூறி ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர், அப்பகுதி மக்களைச் சந்தித்த விபரங்களை நாடாளுமன்ற உறுப்பினருக்கு அவர்கள் தெரிவித்தனர்.

நந்தவனம் குடியிருப்பு மக்களின் நியாயமான உணர்வைப் புரிந்து கொண்ட எம்.பி. துரை வைகோ அவர்கள், பதினைந்து வருடங்களாக குடிநீர், மின்சாரம் இல்லாமல் சிரமப்படும் அப்பகுதி மக்களுக்கு அருள்மிகு தாருகாவனேஸ்வரர் கோயில் நிர்வாகம் அடிமனை வாடகை ரசீது வழங்கிட வலியுறுத்தி, அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு சேகர்பாபு அவர்களுக்கு கடிதம் எழுதி, இன்று மறுமலர்ச்சி திமுக வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளரும், சென்னை மாமன்ற உறுப்பினருமான சு.ஜீவன் அவர்கள் வாயிலாக, அறநிலையத் துறை அமைச்சரிடம் நேரில் ஒப்படைக்கச் செய்தார் எம்.பி. துரை வைகோ.

மே 10-ஆம் தேதி இரவு பொதுமக்கள் தரப்பில் இருந்து எம்.பி.துரை வைகோ அவர்களுக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது. மே 11-ஆம் தேதி மாவட்டச் செயலாளரை நந்தவனம் பகுதிக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளச் செய்கிறார். மே 12-ஆம் தேதி ஆய்வு விபரங்களைக் கேட்டறிகிறார். மே 13-ஆம் தேதி அறநிலையத்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, மே 14-ஆம் தேதி வடசென்னை மாவட்டச் செயலாளரை அனுப்பி, அமைச்சரிடம் நேரிடையாக பரிந்துரைக் கடிதத்தை வழங்கச் செய்கின்றார்.

எம்.பி. துரை வைகோ அவர்கள் செயல் மாமணி என்பதை தமது பணிகளால் நிரூபித்து வருகின்றார்.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக ஒரு வாழ்க்கை போராட்டம் நடத்தி வந்த நந்தவனம் கிராமத்து மக்களின் வாழ்க்கையில் விடியலை உருவாக்குவதற்காக மாபெரும் முன்னெடுப்புகளை எடுத்து வரும் நமது திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துறை வைகோ எம்பி அவர்களுக்கு நியூ திருச்சி டைம்ஸ் தன் நெஞ்சார்ந்த நன்றிகளை பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.