
2025ல் தமிழ்நாட்டில் வீட்டிற்கு மின்சாரம் வந்ததை கேக் வெட்டி கொண்டாடுகின்றனர். நம்ப முடிகிறதா உங்களால் ஆம், திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் மின்சாரம் இல்லாமல் கடந்த ஆறு வருடமாக மூன்று பெண் குழந்தைகளுடன் அல்லாடி வந்தார் சிவசங்கரி.

இவர் தாத்தா திருப்பராய்த்துறை திருக்கோயிலில் பணியாளர், கோயில் வழங்கிய இடத்தில் கூரை வீட்டில், குடியிருந்து வந்தார். தாத்தா இறந்த பின்னர் சிவசங்கரி தனது பாட்டியுடன் கூரை வீட்டில் ஒத்தை மின்சார விளக்குடன் வசித்து வந்தார். மழையின் காரணமாக கூரை வீடு இடிந்து விடவே கடனை உடனை வாங்கி ஒரு ஒட்டு வீடு கட்டினார், பின்னர் மின்சார இணைப்பிற்கு மின்சார வாரியத்தை அணுகினார், அவர்கள் திருக்கோயில் அலுவலகத்தில் சான்றிதழ் வாங்கி வர சொன்னார்கள் ,

திருக்கோயில் நிர்வாகமோ இவருக்கு ஷாக் கொடுத்தது, நீங்க ஆக்கிரமிப்பாரர்கள் உங்களுக்கு என்ஓசி கொடுக்க மாட்டோம் எனக் கூறிவிட்டனர். பின்னர் படிப்படியாக எல்லா அலுவலகத்தையும் அதிகாரிகளையும் அணுகி அல்லோலப்பட்டுக் கொண்டிருந்தார் யாரும் உதவுவதாக தெரியவில்லை. திருப்பராய்த்துறையில் வசித்து வரும் 83 வயதான ஓய்வு பெற்ற AE மின்சார வாரிய பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை அவர்கள் மின்சார வாரியத்தில் உரிமையாளரின் அனுமதி இன்றி மின் இணைப்பு பெறுவதற்கான வழிவகைகள் உள்ளது அதன்படி விண்ணப்பிக்கும் படி அறிவுரை வழங்கியுள்ளார். இதன் அடிப்படையில் சிவசங்கரி புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பித்தார் ஆனால் மின்சார வாரியம் சில பல காரணங்களை கூறி அவரது மனுவை தள்ளுபடி செய்வதற்கு முயற்சி செய்து வந்தனர் . தமிழக மின்சார வாரியத்தின் எனர்ஜி செகரட்டி பீலா வெங்கடேஷ் ஐஏஎஸ் அவர்களின்

கவனத்திற்கு ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி தங்கராஜ் சிவசங்கரியின் அவல நிலையை கொண்டு சென்றார். சென்னையில் இருந்து உடனடியாக உத்தரவு பறந்தது திருச்சியில் உள்ள தமிழக மின்வாரிய உயர் அதிகாரிகளுக்கு. 05/05/2025 அன்று மின்சார இணைப்பு கொடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்தது தமிழ்நாடு மின்சார வாரியம்.

நிலத்தின் உரிமையாளரின் அனுமதியின்றி வீட்டிற்கு மின்சார இணைப்பு பெறுவதற்கு வாடகைதாரர்களுக்கு உரிமை உள்ளது என தமிழக மின்சார வாரியத்தில் சட்டம் உள்ளது.
அதன் அடிப்படையில் இவருக்கு மின்சாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Refer Regulation 27(3) and FORM-6 of APPENDIX-III INDEMNITY BOND 29/13 [(Refer clause 27(4)] 29/13 [Substituted as per Commission’s Notification No. TNERC/DC/8/29, dt.02.09.2023]. over
https://www.tnerc.tn.gov.in/Regulation/files/Reg-300520240347Eng.pdf
மின்சாரம் என்பது அடிப்படை வாழ்வாதார உரிமை அதை அனைவருக்கும் காற்று நீர் சுகாதாரம் போல கிடைக்கச் செய்வது அரசின் கடமை. அவர்கள் ஆக்கிரமிப்புதாரர்களாக இருந்தாலும் அவர்களுக்கு மின்சாரம் கொடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்கள் நாட்டில் தீர்ப்பு வழங்கி அரசின் தலையில் கொட்டு வைத்துள்ளனர். ஆனால் அதன் பின்னரும் சட்டம் தெரிந்து இருக்க வேண்டிய மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய மின்சார வாரிய அதிகாரிகள் மக்களை அலைக்கழிக்கின்றனர். ஆக்கிரமிப்புதாரர்கள் அவர்கள் வீட்டை காலி செய்யும்போது மின்சார இணைப்பும் துண்டிக்கப்படும். மின்சாரம் கொடுத்து விட்டால் அவர்களுக்கு அந்த வீடு உரிமை ஆகி விடாது. தமிழக மின்சார வாரிய சட்டத்தில் இதற்கு என வழி வகை செய்யப்பட்டுள்ளது.*ஒரு வீட்டின் வாடகைதாரரும் வீட்டிற்கு அவர் பெயரில் மின்சார இணைப்பு பெற முடியும், இதில் இரண்டு வகை உள்ளது, இடத்தின் உரிமையாளரின் அனுமதியுடன் அல்லது இடத்தின் உரிமையாளரின் அனுமதி இன்றி. நிலத்தின் உரிமையாளரின் அனுமதி இன்றி மின்சாரம் இணைப்பு பெறுவதற்கு என தனியாக தமிழக மின்சார வாரிய சட்டத்தில் வழிவகைகள் உள்ளன, அதைப் பின்பற்றி சிவசங்கரிக்கு தமிழக மின்சார வாரியம் மின்சார இணைப்பு கொடுத்து ஒரு வரலாற்றுச் சாதனை செய்துள்ளது. இதை சான்றாக காட்டி தமிழ்நாட்டில் இனிமேல் அனைவரும் வீட்டிற்கு மின்சார இணைப்பு பெற முடியும். இதே கோயில் இடத்தில் கடந்த 15 வருடமாக திருப்பராய்த்துறை நந்தவனத்தில் மின்சார இணைப்பு இன்றி வாழ்பவர்களும் மின்சார இணைப்புக்கு விண்ணப்பித்து மின்சாரப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிய வருகிறது. திருப்பராய்த்துறை மட்டுமல்லாமல் தமிழக முழுவதும் இதே போன்று மின்சாரம் இல்லாமல் வாழும் பலருக்கு இந்த வரலாற்று நிகழ்வு விளக்கேற்றி வைக்கும் என்பது எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.