
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் எலமனூர் கொடிங்கால் வாய்க்காலில் பழங்காலத்தில் அச்சுக்கல் கொண்டு கட்டப்பட்ட, தற்பொழுது உடைந்து பயனற்ற நிலையில் உள்ள கீழ் போக்கு குழாய், கொடிங்கால் வாய்க்கால் தலைப்பு மதகில் உள்ள அணை மற்றும் அதன் மதகுகளை சரி செய்து தருமாறு முதல்வரின் முகவரி மற்றும் நேற்று நடந்த ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை வைத்துள்ளனர்.

பொதுவாக, முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு சொல்லும் பதில் என்னவென்றால் “வரும் நிதியாண்டில் நிதி நிலைமை ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் செய்து தரப்படும்“ என்பதே ஆகும். ஐயா இங்கு நிதிநிலைமை முக்கியமல்ல, பிரச்சனை ஆழம், மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு முக்கியமானது” , எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர் விவசாயிகள்.

சிறப்பாக செயல்படும் மக்களின் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் விடியல் ஆட்சியில் விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பதற்கு என்றும் நிதி நிலையில் பற்றாக்குறை ஏற்பட்டதே இல்லை. ஆகவே முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் அந்த இடத்தை உடனடியாக களப்பணி செய்து, பாதிப்பு மற்றும் பிரச்சனையின் உண்மை நிலையை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் வேண்டுகோள் வைக்கின்றனர்.

அதேபோல், இந்த கொடிங்கால் வாய்க்காலில் உள்ள சிறு தடுப்பணையின் 04 ரெகுலேட்டர்களை சரி செய்து தருமாறு கடந்த பல வருடமாக விவசாயிகள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் ரெகுலேட்டர்கள் ஆங்காங்கே உடைந்துள்ளன, ரெகுலேட்டர்கள் சரியாக வேலை செய்வதில்லை, ஏற்றி இறக்குவதில் , பயன்பாட்டில் பிரச்சனை உள்ளது. ஆனால் இன்று வரை இது சரி செய்யப்படவில்லை.

இந்த வாய்க்காலில் உள்ள கீழ் போக்கு குழாய் ஆங்காங்கே உடைந்துள்ள காரணத்தினால் தண்ணீர் சரியாக வடிவதில்லை, இதனால் பயிர்கள் அனைத்தும் பாழாகின்றன. கொடிங்கால் வாய்க்காலில் நீர்வரத்து முழுவதுமாக அல்லது அதிகமாக இருக்கும் பொழுது, மழை பெய்யும் பொழுது விவசாய நிலங்களில் இருந்து வடிய வேண்டிய நீர் வடிய முடியாமல் போய்விடுகிறது. மேலும் இந்த கீழ்போக்கு குழாய் உடைந்துள்ள காரணத்தினால் கொடிங்கால் நீர், வயலுக்குள் புகுந்து விவசாய நிலங்களில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. கீழ்போக்கு குழாய் உடைந்துள்ள காரணத்தினால் கிட்டத்தட்ட 40- 50 விவசாய நிலங்கள் பதிப்புக்கு உள்ளாகின்றன.

விவசாயிகளின் கோரிக்கை என்னவென்றால், இப்பொழுது ஆற்றில் நீர் வரத்து குறைவாக உள்ளது , ஆகவே போர்க்கால அடிப்படையில் உடனடியாக கொடிங்கால் வாய்க்காலில் உள்ள கீழ் போக்கு குழாய் மற்றும் ரெகுலேட்டர்களை சரி செய்து விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாற்றுங்கள் என கோரிக்கை வைக்கிறார்கள் எலமனூர் விவசாயிகள்.
