திருவாரூர் :
திருவாரூர் மாவட்டம் தென்பரை ஊராட்சியில் கிராமப்புற மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய இளைஞர்கள் போட்டித்தேர்வை எளிதாக எதிர்கொண்டு அரசு வேலைவாய்ப்பைப் பெறுவதற்கான பயிற்சியைத் தென்பரை இலவச பயிற்சி மையம் 2016 செப்டம்பர் முதல் வழங்கி வருகிறது.

கடந்த பத்தாண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டித் தேர்வர்களுக்கு இம்மையத்தின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 2017 – 18 ஆம் ஆண்டில் முதன் முதலாக கற்பகநாதர்குளம் கிராமத்தைச் சேர்ந்த ரெ.அமுதா என்பவர் டிஎன்பிஎஸ்ஸி தொகுதி 4 இல் இளநிலை உதவியாளராக கோயமுத்தூர் நீதிமன்றத்தில் பணியில் சேர்ந்தார்.

அதனைத் தொடர்ந்து 2021 – 22 ஆம் ஆண்டில் மன்னார்குடி நீதிமன்றத்தில் அ.நித்யா, எம்.ஆர்.ரம்யா ஆகியோரும், கும்பகோணம் நீதிமன்றத்தில் அ.இலக்கியதாசனும் பணியில் சேர்ந்தனர். 2022 – 23 ஆம் ஆண்டில் திருக்குவளையை அடுத்த செம்பியமங்கலத்தைச் சேர்ந்த மு.ஜெயக்குமார் ஃபீல்டு சர்வேயராக கடலூர் மாவட்டத்திலும், ச.ஐயப்பன் இரண்டாம்நிலை காவலராகவும் பணியில் சேர்ந்தனர்.

அதே வருடத்தில் டிஎன்பிஎஸ்ஸி தொகுதி 4 இல் இளநிலை உதவியாளராக கா.சித்ரா, பெ.ஜான்சி எமிலி, ரா.கோகிலாராணி, வே.முத்துமணி, நா.நெல்சன், இரா.சிந்துஜா, ச.பிரகதீஷ் ஆகியோரும், தட்டச்சராக ர.வர்ஷா, ம.அருள்தேவியும் பணியில் சேர்ந்தனர். 2023 – 24 ஆம் ஆண்டில் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மாநில அளவில் 32 பணியிடங்களில் ஒருவராக இம்மையத்தில் பயின்ற பெ.ஜான்ஸி எமிலி தேர்ச்சி பெற்று மன்னார்குடி வட்டார கல்வி அலுவலராக பணியேற்றார்.

2024 ஆம் ஆண்டில் மத்திய அரசின் அஞ்சல்துறை நடத்திய தேர்வில் தேர்ச்சி பெற்ற மு. அமலா, தெ.தீபா, பா.செந்தில்குமார் ஆகியோர் பணியில் சேர்ந்துள்ளனர்.

மேலும் க.கயல்விழி மன்னார்குடி கூட்டுறவு நிறுவனத்தில் இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். 2024 – 25 ஆம் ஆண்டில் டிஎன்பிஎஸ்ஸி தொகுதி 4 இல் இளநிலை உதவியாளராக ஞா.ஹரிகரன், அ.இலக்கியதாசன், த.ராணி, நி.பாண்டிலெட்சுமி ஆகியோரும், ரா.விஜய் தட்டச்சராகவும், மு.ஜீவிகா சுருக்கெழுத்து தட்டச்சராகவும் பணியில் சேர்ந்துள்ளனர்.

கடந்தவாரம் வெளியான மெட்ராஸ் உயர்நீதிமன்ற எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவில் இம்மையத்தின் இ.செல்வகுமார், இ.ஜெயஸ்ரீவித்யா, கு.சபிதா ஆகியோர் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 14 பணியிடங்களில் 3 பணியிடங்களை பெற்று பெருமை சேர்த்துள்ளனர். இதுவரை ஒரு ரூபாய் செலவில்லாமல் 30 அரசுப்பணியாளர்களை உருவாக்கி அந்த குடும்பங்களில் ஒளிவிளக்கு ஏற்றிவைத்திருக்கும் தென்பரை இலவச பயிற்சி மையத்தை பொதுமக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விதுறை நா.சுப்ரமணியன், அரசுப்பள்ளி ஆசிரியர் சு.வைரமுத்து, அரசுப்பள்ளி இளநிலை உதவியாளர் மு.சீத்தாலெட்சுமி ஆகியோர் போட்டித்தேர்வர்களுக்கு சிறப்பான பயிற்சியை வழங்கி வருகின்றனர்.

நா. சுப்ரமணியன், நிறுவுநர் கூறுகையில் :
கிரமப்புற மாணவர்களிடம் தாழ்வு மனப்பான்மையை போக்குவதே எங்களின் முதற்கட்ட பணியாக அமைந்தது. தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் பயத்தைப் போக்கி முயற்சி செய்து கடின உழைப்பால் படித்தால் இலக்கை அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையை விதைத்துக்கொண்டிருக்கின்றோம். ஒருங்கிணைந்த டெல்டா மாவட்டத்தில் அரசுப்பணியாளர்களின் விகிதாச்சாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் முக்கியமான இலக்காக உள்ளது. சுதந்திரத்திற்கு முன்னர் 1942 இல் தமிழ்நாட்டில் முதன் முதலாக விவசாய சங்கம் தென்பரையில் பி.சீனிவாசராவ் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டு பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட இக்கிராமத்தில் சத்தமில்லாமல் ஒரு சமுதாய புரட்சியை நடத்தி வருகின்றோம் என்று கூறுகின்றார்.

சு.வைரமுத்து, இயக்குநர் கூறுகையில்:
சாதிக்கத் துடிக்கும் எத்தனையோ கிராமப்புற இளைஞர்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழும் இப் பயிற்சி மையம் அரசுப் பணியில் சாமானியர்களும் அமரலாம் என்பதை சாதித்துக் காட்டி வருகிறது. சமூக, பொருளாதார நீதியினை வழங்கிட தன்னால் இயன்றவரை இயங்கி வருகிறது. கல்வி பொது சேவை என எல்லாத் துறைகளிலும் வியாபித்துக் கொண்டிருக்கின்ற பயிற்சி மையம் இன்னும் பல இளைஞர்களுக்கு அரசு பணி கிடைத்திட அயராது பாடுபடும் என்பதை உறுதியோடு சொல்லலாம். கிராமப்புறத்தில் பின் தங்கிய பகுதியில் இயங்கி வந்து இன்று எல்லோருக்குமான ஒரு மையமாக திகழ்வதில் பெருமையே. விவசாயத்தையே பெரிதும் நம்பி வந்த எங்களின் டெல்டா பகுதியில் அடுத்த தலைமுறைகளை அரசு பணியில் கொண்டு சேர்த்து ஊழலற்ற ஒரு தேசத்தை அமைத்திட அயராது பாடுபடுகிறோம் என்றார்.

மு. சீத்தாலெட்சுமி, பயிற்சியாளர் : :
முதல் தலைமுறை பட்டதாரிகளாக இருக்கிற கிராமப்புற மாணவர்களை முதல் தலைமுறை அரசு ஊழியர்களாக மாற்றுகிற பணியில் நானும் ஒரு துளியாய் இருப்பதில் மகிழ்வடைகிறேன். பெண்களுக்கான பொருளாதார சுதந்திரம் என்பது பெண் தன்னைத் தானே காத்துக் கொள்வதற்கும் தன்னைச் சார்ந்தோரை கவனித்துக் கொள்வதற்கும் தேவைப்படும் ஒரு மிகப்பெரிய ஆயுதம். இங்குள்ளவர்களில் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் என்பதால் இக்கருத்தை பதிவு செய்கிறேன். கணித பகுதியில் 100 சதவீத மதிப்பெண் பெறுவதற்கான எளிய வழிகளை எங்கள் போட்டித் தேர்வர்களுக்கு பயிற்றுவித்து வெற்றி காண்கிறோம் என்பதை எங்கள் மையத்தின் தனிச்சிறப்பாகக் கருதுகிறேன்.

மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் தென்பரை ரோட்டரி சமுதாயக் குழுமம் மூலம் தென்பரை இலவச பயிற்சி மையம் நடைபெற்று வருகிறது.
தென்பரை ரோட்டரி சமுதாயக் குழுமத்தின் தலைவர் பி. மணிவண்ணன்.
இந்த இலவச பயிற்சி பட்டறையில் சேர விரும்புவோர் கீழ்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
பி. மணிவண்ணன் : 9751909790நா. சுப்ரமணியன், நிறுவுநர் : 9486319193