மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை, திருச்சிராப்பள்ளி
ஸ்ரீரங்கத்தை சேர்ந்த செந்தமிழ் செல்வன், பிரியங்கா ஆகியோரது 1 வயது 7 மாதம் ஆன ஆண் குழந்தை யுகன் ராஜ், கடந்த பத்து நாட்களாக இருமல் மற்றும் நான்கு நாட்களாக காய்ச்சல் தொந்தரவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார், இந்நிலையில் 17/11/25 அன்று அதிகாலை மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் செயற்கை சுவாச உபகரணத்தில் உதவியோடு மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட குழந்தைக்கு உடனடியாக ஊடு கதிர் (X-Ray) எடுக்கப்பட்டு அதில் இடது பக்க மூச்சுக்குழாயில் பாக்கு போன்ற பொருள் (Foreign Body) சிக்கிக் கொண்டது தெரியவந்தது. அதன் விளைவாக இடதுபுற நுரையீரல் சரியாக வேலை செய்யாமல் இருப்பது தெரியவந்தது.
பின்பு குழந்தை அறுவை அரங்கிற்கு அழைத்து செல்லப்பட்டு முழு மயக்க மருந்தின் கீழ், வளையாத அகநோக்கி (Rigid Bronchoscopy) செலுத்தப்பட்டு அவரது இடது மூச்சுக்குழாயில் சிக்கிய பாக்கு போன்ற பொருள் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இச்சிகிச்சையினால் மூச்சுப் பாதை திறந்து நுரையீரலில் காற்று இயல்பாக செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டது. பாக்கு போன்ற பொருளால்(foreign body) ஏற்பட்ட அடைப்பினால் விரிவடையாமல் சுருங்கி கெட்டியாகப் போன இடதுபுற நுரையீரல், இப்போது காற்றின் சீரான இயக்கத்தால் மீண்டும் நன்றாகச் சுருங்கி விரியத் தொடங்கி இயல்பு நிலைக்கு வந்தது. இவ்வாறு சரியான நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சை காரணமாக குழந்தையின் உயிர் வெற்றிகரமாக காப்பாற்றப்பட்டது.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையின் முதல்வர்.டாக்டர்.குமரவேல், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர். உதய அருணா, அவர்களின் மேற்பார்வையில் காது, மூக்கு,தொண்டை அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் வாய்ந்த மருததுவக் குழு பேராசிரியர் டாக்டர்.டி. சிவசுப்பிரமணியன், பேராசிரியர் டாக்டர். ஜே. பாலசுப்பிரமணி, உதவிப் பேராசிரியர் டாக்டர் வி. சுந்தரராமன், வி. அண்ணாமலை, மயக்கவியல் பேராசிரியர் டாக்டர் செந்தில் குமார் மோகன் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கொண்ட மருத்துவக் குழுவினரால் அக்குழந்தைக்கு சரியான நேரத்தில் விரைவாக சிகிச்சை அளித்து குழந்தையின் உயிரைக் காப்பாற்றினர்



