
திருச்சி:
மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 21 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் கம்ப்யூட்டர், டேபிள், நாற்காலி, பழைய பேப்பர், மின் மோட்டார் என பயன்பாட்டில் இல்லாத பல இலட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ளது.

இந்நிலையில் தொப்பம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்திலுள்ள பொருட்களை பிடிஓ அண்ணாதுரை இட்ட வாய்மொழி உத்தரவின் பேரில் அவர் அனுப்பி வைத்த சரக்கு வாகனத்தில் ஊராட்சி செயலர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் பிடிஓ எதிர்பார்த்த அளவிற்கு கணிசமான தொகைக்கு பொருட்கள் தேராதால் வாகனத்தை மொண்டிபட்டி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு அனுப்பி அங்குள்ள பொருட்களை அனுப்பி வைக்கும்படியும் இது உயர் மட்ட அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்கும் படியும் அறிவுறுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அந்த வாகனம் மொண்டிபட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தை அடைந்து அங்குள்ள பொருட்களை ஊராட்சி செயலர் அனுப்பி வைக்க முற்பட்டபோது அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர் வெங்கடேசன் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அங்கு விரைந்த சமூக ஆர்வலர் வெங்கடேசன் எந்தவித முன் அறிவிப்புமின்றியும், பொது ஏலம் விடாமலும் பொருட்களை சட்டவிரோதமாக ஏற்றிச் செல்வது எப்படி? என ஊராட்சி செயலரிடம் விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு விளக்கம் அளித்த ஊராட்சி செயலர் பிடிஓ அறிவுறுத்தலின் பேரில் செய்ததாக கூறியுள்ளார். இதை எடுத்து சமூக ஆர்வலர் வெங்கடேசன் பி டி ஓ அண்ணாதுரை அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் கேட்ட போது அதைப்பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று முன்னுக்குப் பின் முரணாக பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளார்.

மேலும் இது குறித்து ஊராட்சி செயலர் பேசிய ஆடியோ தன்னிடம் இருப்பதாகவும் அதை தங்களுக்கு அனுப்பினால் நடவடிக்கை எடுப்பீர்களா என கேட்டதற்கு சட்டென துண்டித்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பொருட்களை ஏற்றிய நிலையில் இருந்த ஆட்டோவை சமூக ஆர்வலர் புகைப்படம் எடுத்ததால் ஓட்டுநர் ஆட்டோவை எடுத்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார்.

பின்னர், இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகளிடம், பஞ்சாயத்து பிடிஓ அண்ணாதுரை சட்டத்திற்கு விரோதமாக அரசுக்கு சொந்தமான பொருட்களை விற்க முயல்வதாக அலைபேசி வாயிலாக தகவல் தெரிவித்துள்ளார். பட்டப் பகலில் அரசு அலுவலகங்களில் உள்ள பழைய பொருட்களை அரசின் அனுமதியின்றி பிடிஓ அண்ணாதுரை சில ஊராட்சி செயலர்களை கையில் வைத்துக் கொண்டு அரசுக்கு இழப்பீடு ஏற்படும் விதத்தில் கொள்ளை அடிக்க முயன்றது வேலியே பயிரை மேய்ந்ததை போல் அரங்கேறிய இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


