
திருச்சி எம்.பி. துரை வைகோ அவர்களின் முயற்சியில்
ஆலம்பட்டி புதூரில் வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் ஆய்வு
திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்களின் முயற்சி காரணமாக ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஒன்றியம், ஆலம்பட்டி புதூரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை அமைத்திட அதிகாரிகள் (20.06.2025) இன்று ஆய்வுப்பணியில் ஈடுபட்டனர்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள், ரயில்வே மேம்பால ஆய்வுப்பணிக்காக 04.01.2025 அன்று இனாம்குளத்தூர் வருகை தந்தார். அப்போது, திமுக மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சரவணக்குமார் அவர்கள் ஆலம்பட்டி புதூருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை வேண்டும் என்று, எம்.பி. துரை வைகோ அவர்களிடம் கோரிக்கை மனு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆலம்பட்டி புதூர் ஊர் மக்கள் பலர் கையெழுத்திட்டு எம்.பி. அலுவலகத்தில் 28.01.2025 அன்று மனு அளித்தனர்.

திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் உள்ள மிக முக்கியமான ஊர் ஆலம்பட்டி புதூர். இந்த ஊரில் வங்கி அமையுமானால் சுமார் 10 கி.மீ. சுற்றளவுள்ள 30 சிறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவார்கள். எனவே, அவசியம் கருதி ஆலம்பட்டி புதூர் மக்களின் பல வருட கோரிக்கையாக இருந்து வரும், வங்கிக் கோரிக்கையை உடனடியாக செயல்படுத்திட வேண்டும் என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல மேலாளருக்கு 02.02.2025 அன்று, திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் அவர்களின் மூலம் எம்.பி. துரை வைகோ அவர்களின் பரிந்துரைக் கடிதம் வழங்கப்பட்டது

இதுதொடர்பாக திருச்சி முன்னணி வங்கி மேலாளர் (LEADING BANK MANAGER) முருகேசன் அவர்களை அழைத்து, எம்.பி. அவர்களின் கோரிக்கைக்கு முக்கியத்துவம் அளித்து ஆய்வுப்பணியில் ஈடுபடுமாறு முதுநிலை மண்டல மேலாளர் அறிவுறுத்தினார்.

எம்.பி. துரை வைகோ அவர்களும் அவ்வப்போது மாவட்டச் செயலாளர் மூலமாக தொடர் அழுத்தம் கொடுத்து வந்தார்கள். இதனையடுத்து இம்மாதம் 16.06.2025 அன்று முன்னணி வங்கி மேலாளர் அலுவலகத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனையின்படி, இன்று (20.06.2025) ஆலம்பட்டி புதூர் கிராமத்திற்குச் சென்று முன்னணி வங்கி மேலாளர் முருகேசன், ஐ.ஓ.பி. உதவி மேலாளர் சிவசங்கர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில் எம்.பி. துரை வைகோ மற்றும் வங்கி உயர் அதிகாரிகள் வழிகாட்டுதலுடன் ஐ.ஓ.பி. வங்கியின் கிளை அமைப்பதற்கு முயற்சிப்பதாகத் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின்போது மறுமலர்ச்சி திமுக திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம், மணிகண்டம் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஆரோக்கிய ரெக்ஸ் தனராஜ், மாவட்டப் பிரதிநிதி டாக்டர் பி.எம்.இராமச்சந்திரன், மாவட்ட இலக்கிய அணிச்செயலாளர் பெ.இராமநாதன், திமுகவைச் சேர்ந்த முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சரவணக்குமார், எல்.ஐ.சி.சார்லஸ், எம்.எம்.ஆர்.டிரேடர்ஸ் லாசர், சரஸ்வதி ஸ்டோர் கூடலிங்கம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.