
திருச்சி மதுபான பாரில் இளம் பெண்கள் உற்சாகம்; அதிரடி காட்டிய காவல்துறை
திருச்சியில் சமீப காலமாக சமூக சீர்கேடுகளுக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பல்வேறு விதமான மன மகிழ் மன்றங்கள் திருச்சியில் ஆங்காங்கே முளைத்து பார்ப்போரை கவர்ந்திழுத்து சமூக சீர்கேடுகளுக்கு விதையிட்டிருக்கின்றது. அந்த வகையில், திருச்சி திண்டுக்கல் சாலை, தீரன் நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதி மதுபான பாரில் அனுமதியின்றி டிஜே இசையுடன் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டது மிகப் பெரும் சர்ச்சை ஆகி உள்ளது. இந்த மதுபான விடுதி அரசியல் பின்புலம் கொண்டவர்களின் கையில் இருப்பதால் நடவடிக்கை எடுப்பதில் பலரும் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த தனியார் விடுதி மதுபான பாரில் இரவு 8 மணி முதல் ஒன்பது மணி வரை பெண்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக ஊடகங்களில் பரவிய தகவலால் அந்த விடுதிக்கு இளம் பெண்கள் குவிய தொடங்கினர்.
இதனை தொடர்ந்து, கன்டோன்மென்ட் காவல்துறை உதவி ஆணையர் யாஸ்மின் பானு தலைமையிலான போலீஸ் குழு அந்த விடுதியின் செயல்பாடுகளை ரகசியமாக கண்காணித்தனர். நேற்று இரவு அந்த தனியார் விடுதியை நோக்கி கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் குவியத் தொடங்கினர்.
இதனையடுத்து போலீசார் திடீர் நடவடிக்கையாக விடுதிக்குள் நுழைந்து சோதனை நடத்தினர்.
சோதனையில், அரசு அனுமதி இல்லாமல் டிஜே இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டதும், அதில் 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி உட்பட மொத்தம் 14 பேர் பங்கேற்றிருந்ததும் தெரிய வந்தது.
மேலும், நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட சில ஒலிப் பெருக்கி சாதனங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அந்த இடத்தில் இருந்த அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு, சிலரை காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகுமாறு அறிவுறுத்தப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுமிக்கு போலீசார் அறிவுரை வழங்கி பாதுகாப்புடன் அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, விடுதி மேலாளர் ஸ்டான்லியை எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


