New Trichy Times

Current Date and Time
Loading...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் பல தசாப்தங்களாக கைவிடப்பட்ட மூன்று நீர்ப்பாசன கால்வாய்களை வேளாண் பொறியியல் துறை அடையாளம் கண்டுள்ளது. அந்த வாய்க்கால்களை தூர்வாரும் பணி தற்போது நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில், வேளாண் பொறியியல் துறை 1 கோடி ரூபாய் செலவில் 222 கி.மீ நீளமுள்ள C மற்றும் D வகை வாய்க்கால்கள் தூர்வாருகிறது.

தமிழ்நாட்டில் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால்கள் மற்றும் நீர்நிலைகளில் சேர்ந்துள்ள மண் குவியல்கள், புதர்களை அப்புறப்படுத்தி நீர் தடை இல்லாமல் பாசனத்துக்கு செல்லும் விதமாக ஆண்டுதோறும் நீர்வளத் துறை சார்பில் நீர்நிலைகள் தூர் வாரப்படுகின்றன. இதற்காக ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில், ”தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் காவேரி, வெண்ணாறு, வெள்ளாறு வடிநில பகுதிகள் மற்றும் கல்லணை கால்வாய் பாசன பகுதிகளில் உள்ள ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்களில் 2925 கி.மீ நீளத்துக்கு ரூ.13.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.” என்று தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு நீர்வளத் துறை வரலாற்றில் தொழில்நுட்ப வசதியை கொண்டு தூர் வாரும் பணியை அதிகாரிகள் அன்றாடம் கண்காணிக்கும் வகையில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு (TNWRIMS) என்கிற செயலி கடந்த 2023 ஆம் ஆண்டே அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் எந்தெந்த நீர்நிலைகளில், தூர் வாரும் பணி எத்தனை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடக்கிறது? என்கிற விவரம் இடம் பெற்றிருக்கும். மேலும் தூர் வாரும் முன்பாக அந்த இடத்தின் புகைப்படம், தூர்வாரிய பிறகு அந்த இடத்தின் புகைப்படம் ஆகியவற்றை தினமும் நீர்வள துறை அலுவலர்கள் இந்த செயலியில் பதிவேற்றம் செய்வார்கள்.

திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் இந்த தூர்வாரும் பணியை களத்தில் நின்று திறம்பட செய்து வருகின்றனர். திருப்பராய்த்துறை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் வேளாண் பொறியியல் துறை கிட்டத்தட்ட பத்து ஜேசிபி வண்டிகள் பணியில் அமர்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாதிரி வேளாண் பொறியியல் துறையால் இவ்வளவு பெரிய அளவில் திருப்பராய்த்துறையில் பணிகள் நடப்பது இதுவே முதல்முறை என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது ரயில்வே வாய்க்கால் (1.5 கி.மீ), தென்கரை வாய்க்கால் (3 கி.மீ), மற்றும் புதிய அய்யன் வாய்க்கால் (1.5 கி.மீ) ஆகிய மூன்று செயலிழந்த ‘சி வகை’ கால்வாய்களை அடையாளம் கண்டு தற்போது தூர்வாரும் பணி நடைபெற்று வருவதாக அந்தத் துறை தெரிவித்துள்ளது. காவிரி நதி நீரின் உதவியுடன், அந்தநல்லூர் தொகுதியில் மொத்தம் 500 ஏக்கர் நெல் சாகுபடிக்கு நீர்ப்பாசனம் செய்ய இந்த கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, விவசாயிகள் நிலத்தடி நீரிலிருந்து தண்ணீரை இறைத்து வந்தனர்.

“மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் அந்த மூன்று ‘சி சேனல்களில்’ தூர்வாரும் பணி கைவிடப்பட்டு, பல ஆண்டுகளாக மறக்கப்பட்டது. இருப்பினும், பல தசாப்தங்களுக்குப் பிறகு நாங்கள் பணியை மேற்கொண்டுள்ளோம். நிறைவடைந்த பிறகு, விவசாயிகள் இயற்கையாகவே காவிரி நீரை எந்த இழப்பும் இல்லாமல் பெறுவார்கள்” என்றும் மேலும் “மீட்கப்பட்ட இடங்களில் தூர்வாரும் பணி இந்த வாரம் நிறைவடைந்து, காவிரி நதி நீர் திறந்து விடப்படுவதற்கு முன்பு செயல்பாட்டுக்கு வரும்” வரும் என்கிறார்கள் வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள்.

விவசாயிகள் இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும் என்று முதல்வரின் முகவரியிலும் விவசாய குறைதீர்க்கும் கூட்டங்களிலும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். அவர்களின் கோரிக்கை எடுக்கப்பட்டு தற்போது இந்த வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன.

விவசாயிகளின் வேண்டுகோள் என்னவென்றால், முக்கொம்பு ஆற்று பாதுகாப்பு கோட்ட அதிகாரிகள் இந்த பாசன வாய்க்கால்களை பாதுகாக்க வேண்டும் “கால்வாய்களின் முழு அகலமும் தூர்வாரப்படுவதை துறை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட வேண்டும். கரைகளை பலப்படுத்த வேண்டும். பக்கவாட்டுப் பகுதிகள் விவசாய இடுபொருட்களை கொண்டு செல்வதற்கு வாகனங்கள் செல்லக்கூடிய வகையில் இருக்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கின்றனர்.

விவசாயிகளுக்காக பல நல்ல திட்டங்களையும் கோடிக்கணக்கில் பணத்தை செலவழிக்கும் தமிழக முதல்வர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று உடனடியாக செயல்படுத்துவார் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Posts

POST MY ADD