
கோவில்பட்டியில் இருந்து திருவேங்கடம் செல்லும் வழியில் மைப்பாறை கிராமம் உள்ளது. அங்கே எழில் கொஞ்சும் அழகிய மலை ஒன்று இருக்கிறது.
.

கடந்த 08.12.2021 அன்று கழகத் தோழர்களுடன் அந்த மலைக்கு சென்று, அரச மர பூங்கா அமைக்கும் கனவில் முன்னூறுக்கும் மேற்பட்ட அரச மரக் கன்றுகளை நட்டேன்.

இருக்கின்ற மரங்களிலேயே அரச மரத்திற்கு தனிச் சிறப்புகள் பல உண்டு. அதிக அளவில் உயிர்க்காற்றை உற்பத்தி செய்யும் ஆற்றல் அரச மரங்களுக்கு தான் உண்டு.

காலையில் இருந்து மாலை வரை அங்கிருந்து அந்தப் பணிகளை செய்தேன். இயற்கை வளங்களை பாதுகாப்பதில் எனக்கு எப்போதும் தனித்த ஆர்வம் உண்டு.கட்சி நிகழ்ச்சிகளில் பயனற்ற பொன்னாடைகள் அணிவிப்பதை தவிர்த்து மரக்கன்றுகளையும், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் புத்தகங்களையும் தாருங்கள் என, அரசியலுக்கு நான் வந்த நாளில் இருந்து கண்டிப்புடன் வலியுறுத்தி வருகின்றேன்.

மைப்பாறை மலையில் அரச மர பூங்காவை உருவாக்கி பாதுகாக்க வேண்டும் என்பது என் கனவு. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அதற்கு செயல்வடிவம் தரும் வகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்து அதை பாதுகாக்க கூண்டுகளையும் வைத்தோம். தொடர்ந்து தண்ணீர் விட்டு அதை பராமரிக்க வேண்டும் எனவும் கழகத் தோழர்களிடம் கேட்டுக் கொண்டேன்.அந்தப் பகுதிக்கு எப்போது சென்றாலும் அந்த மரக் கன்றுகளை பார்வையிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளேன். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, மதுரையில் நடைபெற்ற சமூக நல்லிணக்க மாரத்தான் போட்டியில் பங்கேற்றுவிட்டு கலிங்கப்பட்டிக்கு திரும்பும்போது வழக்கம்போல் மைப்பாறை மலைக்கு சென்றேன்.தகுந்த பராமரிப்புகள் இன்றி அரச மரக் கன்றுகள் இருப்பதை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். சற்று வளர்ந்திருக்கும் செடிகளை கூட ஆடுகள் கடித்து சேதப்படுத்தி உள்ளது. செடிகளை பாதுகாக்க அமைக்கப்பட்ட கூண்டுகள் பல இடங்களில் சாய்ந்து கிடந்தது. சில செடிகள் முழுவதுமாக இல்லாமல் போய்விட்டது.இதையெல்லாம் பார்த்துவிட்டு, அந்தப் பகுதியில் உள்ள நம் கழகத் தோழர்களை தொடர்பு கொண்டு கூடுதல் கவனத்துடன் அரச மரக் கன்றுகளை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தினேன்.மிகுந்த ஆர்வத்துடன், உரிய திட்டமிடுதலுடன் நேரத்தை ஒதுக்கி, இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் மைப்பாறையில் அரச மர பூங்கா அமைக்கும் பணியினை தொடங்கினேன். முன்னூறுக்கும் மேற்பட்ட மரக் கன்றுகளையும் நட்டேன். ஆனாலும் கூட உரிய பராமரிப்புகள் இன்றி நம் நோக்கத்தில் தேக்கம் ஏற்பட்டு உள்ளது.அரசியலும் அப்படி தான். நாம் மிகுந்த முயற்சி எடுத்து கழகத் தோழர்கள் பலருக்கு கூட்டணியில் பல இடங்களை போராடி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். பல்வேறு பதவிகளுக்கு போட்டியிட்டு பல இடங்களில் நம் தோழர்கள் வெற்றியும் பெற்று இருக்கிறார்கள்.நாம் என்ன நோக்கத்திற்காக அவர்களுக்கு இடங்களைப் பெற்றுக் கொடுத்து வெற்றிபெற வைத்தோமோ, அது முழுமையாக நிறைவேறி இருக்கிறதா என்றால், முழுமையாக திருப்தி அடையும் வகையில் பல இடங்களில் இல்லை என்பது தான் உண்மை.வெற்றி பெற்ற பல தோழர்கள் மக்கள் மன்றத்தில் கட்சிக்கு பெருமை தேடி தரும் வகையில் பணியாற்றி வருகிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், எல்லா இடங்களிலும் அந்த நோக்கம் நிறைவேறி இருக்கிறதா என்றால் இல்லை.மரக் கன்றுகளை நட்டு வைத்து பராமரிக்காவிட்டால் எந்தவொரு பயனும் இல்லாமல் நம் முயற்சி வீணாகிவிடும் என்பதைப் போல தான் அரசியல் பயணமும்.நம் பொறுப்பு உணர்ந்து, நமக்கான வாய்ப்புகளை உணர்ந்து பணியாற்றினால் தான் நாம் எடுத்த முயற்சிக்கும் அரசியலில் பலன் கிடைக்கும்.பெற்ற அனுபவங்களில் இருந்து இதை நான் உணர்ந்து கொண்டேன். நாம் முயற்சி எடுத்து விதைக்கிறோம்.அது நிழல் தரும் மரமாவதும், பாழ்பட்டு இடையிலேயே வீணாவதும் நம் கையில் தான் உள்ளது. அரசியலுக்கும் இது பொருந்தும்..!அன்புடன்துரை வைகோதலைமைக் கழகச் செயலாளர்மறுமலர்ச்சி திமுக19.01.2023