
திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான தாமலவாரூபயம் கிராமம், வார்டு. ஜி, பிளாக்.16, நகரளவை எண் 8-ல் உள்ள நன்செய் 0.9869.4 ச.மீ. பரப்பளவு உள்ள நிலத்தில் பல உட்பிரிவுகளாக பிரிக்கப்பட்டு முறைகேடான வழியில் தனி நபர்களுக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளதால்

அதனை ரத்து செய்து மீண்டும் தாயுமானவர் திருக்கோயில் பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய திருச்சி வருவாய் கோட்டாட்சியருக்கும் மற்றும் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலருக்கும் அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் உதவி ஆணையர்/செயல் அலுவலர் அவர்களின் கடித எண்: ந.க.எண். 631/2022/அ5-நாள்03.02.2023 படி புகார் கொடுக்கப்பட்டது.

திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கோப்பு ந.க.அ7/5176/2023 (ம) ந.க.அ5/1048/2023 ன்படி விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் கடந்த 24.01.2019 தேதியிட்ட கடிதம் மூலம் மேற்படி
சர்வே எண்ணுக்கான பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் குறித்து தங்கள் கருத்தை தெரிவிக்குமாறு மலைக்கோட்டை தாயுமானவர் திருக்கோயில் உதவி ஆணையருக்கு திருச்சி மேற்கு வட்டாட்சியர் அவர்களால் கடிதம் அனுப்பப்பட்டு அதற்கு பதிலளிக்கும் விதமாக, 31.01.2019 தேதியிட்ட கடிதம் வாயிலாக மலைக்கோட்டை கோயில் நிர்வாகத்தால் பட்டா பெயர் மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததால் திருச்சி மேற்கு வட்டாட்சியரால் சாமியப்பன் என்பவரது பட்டா பெயர் மாற்றம் மனு எண்
2019/0154/15/000397-க்கு கோயில் நிலம் என சான்று அளித்து மனுவை நிராகரித்து உள்ளனர்.
அதன் பின்னிட்டு கடந்த 12.09.2020 தேதியன்று பட்டா மாற்றத்திற்கு ஆட்சேபனை தெரிவித்து மீண்டும் தாயுமானவர் கோவில் உதவி ஆணையர் அவர்களால் நினைவூட்டு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் நிலம் என சான்று அளிக்கப்பட்ட உள்ள சாமியப்பன் அவர்களால் மீண்டும் அதே இடத்திற்கு கடந்த 08-01-2022 தேதியன்று கோயில் நிலத்தில் உட்பிரிவு செய்து பட்டா பெயர் மாற்றம் செய்ய மனு எண்: 2021/0154/15/000818 படி விண்ணப்பித்த நிலையில் மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட பல ஆட்சேபனை கடிதங்கள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு திருச்சி மாவட்ட முன்னாள் நில அளவை போட்டோ ஆய்வாளர் ராஜ்குமாருடன் சேர்ந்து வட்ட துணை ஆய்வாளர் கதிர்வேல், முதுநிலை வரைவாளர் வினோபா மற்றும் நகர சார் ஆய்வாளர் கார்த்திக் ஆகியோர் பல லட்சங்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு கோயில் நிலத்தில் முறைகேடாக கடந்த 25-02-2022 தேதியன்று பட்டா வழங்கி உள்ளனர்.
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிர்வாகத்தால் மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் வருவாய் கோட்டாட்சியருக்கு ஆதார ஆவணங்களுடன் புகார் கொடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் மிகவும் அலட்சியமாக செயல்பட்டு வருவதாக இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் நிலத்தில் முறைகேடாக உட்பிரிவு செய்து தனிப் பட்டா வழங்கிய விவகாரத்தில் தவறு செய்த மீது இரண்டு ஆண்டுகளாக நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருந்து வந்த நிலையில் திருச்சி மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 16 வார காலத்திறக்குள்
விசாரணையை முடிக்கவும் மற்றும் பத்திரப் பதிவிற்கு தடை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு வருடங்களாக நடவடிக்கை எடுக்காத திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர், இனியாவது அதிரடியாக நடவடிக்கை எடுப்பாரா என எதிர்பார்ப்போம்…