கடந்த 2020 முதல் 2021 வரை கொரோனா காலகட்டம் என்பதால் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக (லைசால்) கிருமிநாசினி கொள்முதல் செய்துள்ளார். அதில், முறைகேடு நடந்ததாக கூறி மண்ணச்சநல்லூர் நமச்சிவாய நகரை சேர்ந்த எஸ். ராஜன் என்பவர் சென்னையில் உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறையீட்டு மன்றத்தில் அளித்த புகாரின் பேரில் விரிவான விசாரணை செய்து பேரூராட்சியில் உள்ள அனைத்து கோப்புகளையும் ஆய்வு செய்ததில் *தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சியில் 23.03.2020 முதல் 02.09.2021 வரை Lizal கிருமி நாசினி வாங்கிய பட்டியலில் கண்ட விவரப்படி கிருமிநாசினி வாங்கப்படவும் இல்லை. பயன்படுத்தவும் இல்லை. பட்டியலில் Golden Agency, Trichy என்ற நிறுவனத்திற்கு மட்டும் 4/2020 மாதத்திலிருந்து 9/2021 வரை உள்ள காலத்தில் கிருமிநாசினி வாங்கியதாக ரூ.12,29,741/- கொடுக்கப்பட்டுள்ளதாக பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.*ஆனால், Tvl. வி.வி. டிரேடர்ஸ், காட்டூர், திருச்சி-19 என்ற நிறுவனத்திடமிருந்து ரூ.50,000/-க்கும், கோல்டன் ஏஜென்சீஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.12,29,741/-க்கும் லைசால் கிருமி நாசினி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. அதில் V.V. டிரேடர்ஸ் GST எண் அளிக்கப்படவில்லை. இதிலிருந்து மேற்படி நிறுவனம் GST-ல் பதிவு செய்யப்படாத நிறுவனம் என்றும் போலியாக அரசு பணத்தை கொள்ளை அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட நிறுவனம் என்றும் தெரிய வந்துள்ளது. அரசு வழங்கிய பட்டியலில் குறிப்பிட்ட கொள்முதல் அளவிற்கு நிறுவனத்திடம் இருப்பு இருந்துள்ளதா என்பது குறித்து நிறுவனத்தின் இருப்புப் பதிவேடு முதலானவற்றை தணிக்கை செய்ய வேண்டும். இந்த செலவு குறித்து உரிய அனுமதி தொட்டியம் பேரூராட்சியில் இருந்து சம்பந்தப்பட்ட மேல் அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெறப்பட்டதாக தெரியவில்லை. கிருமி நாசினியை பயன்படுத்தியது குறித்து விதிமுறைகளின்படி போட்டோ எடுக்கப்படவில்லை. திருச்சி தொட்டியம் தேர்வுநிலை பேரூராட்சியில் கடந்த 23.3.2020 முதல் 02.09.2021 வரையிலான காலத்தில், கிருமி நாசினி (லைசால்) பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டதில் முறையாக கையாளப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்திடும் வகையிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதைப் பற்றியும் உள்ளாட்சி நிதி சிறப்பு தணிக்கை மூலம் தணிக்கை செய்து, அறிக்கையினை 2 மாதக் காலத்திற்குள் பேரூராட்சிகளின் இயக்குநருக்கு அனுப்பி வைக்குமாறு உள்ளாட்சி தணிக்கை இயக்குநருக்கு பரிந்துரை செய்த தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் முறைமன்ற நடுவர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப (ஓ) ஆணையிட்டுள்ளார்.
