
ஸ்ரீரங்கம் வட்டம் பழையூரில் 18வருடமாக தங்கை குடும்பத்தினர் பயன்படுத்தி வந்த பாதையை திடீரென மூடி கல்லு நட்டு வேலி போட்டு விட்டனர் அண்ணன் குடும்பத்தினர். 12/12/2025, இரவு பாதிக்கப்பட்ட தங்கை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தனது அவல நிலையை குடும்பத்தினருடன் சென்று முறையிட்டார். உடனடியாக சம்பந்தப்பட்ட வட்டாட்சியருக்கு உத்தரவு பறந்தது, அவர் பெட்டவாய்த்தலை காவல்துறையினர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரியுடன் சென்று அந்த வேலிகளை அகற்றி பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்குள் செல்வதற்கு வழிவகை செய்துவிட்டு வந்துள்ளார்.

ஒரு ஏழை குடும்பத்திற்காக, நள்ளிரவில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சித் தலைவரை பெருகமணி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சார்ந்த பொதுமக்கள் அனைவரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இந்தக் குடும்பம் 18வருடமாக மின்சாரம் இல்லாமல் பள்ளி செல்லும் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அவதிப்பட்டு வந்த நிலையில், தற்போது மின்சாரத்திற்கு விண்ணப்பித்ததால் அந்தப் பாதையை மூடியதாக அண்ணன் குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர். 08/10/2025 அன்று அனைத்து ஆவணங்களுடன் மின்சார இணைப்பிற்கு விண்ணப்பித்துள்ளார், மின்சார வாரிய அதிகாரிகள் அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் களப்பணி செய்து எல்லாம் ஓகே என சொல்லி ஆன்லைனில் பதிவேற்றம் செய்து விட்டனர்

.பின்னர் திடீரென திருப்பராய்த்துறை உதவி மின் பொறியாளர் பாதைக்கான தடையின்மைச் சான்றிதழ் சமர்ப்பிக்க கோரி அனுப்பிய கடிதம் 02/12/2025 அன்று கிடைக்கப் பெறவே என்ன செய்வது என்று தெரியாமல் இருந்து வருகிறார்.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் திருப்பராய்த்துறை உதவி மின் பொறியாளர் ஆன்லைனில் உரிய ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்று கடிதம் அனுப்பிவிட்டார்.

ஆனால் அவரது அப்ளிகேஷனை ஆன்லைனில் ஹோல்டில் போடவில்லை, ஹோல்டில் போட்டால் தான் எந்த ஒரு ஆவணங்களையும் மின்நுகர்வோர் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய முடியும். இதில் ஏதோ தவறு இருக்கிறது என்று பொதுமக்கள் நினைக்கின்றனர். ஆகவே மின்சார வாரியம் இது சம்பந்தமாக உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
மேலும், வீட்டு மின்சார இணைப்பிற்கு விண்ணப்பித்தால் ஒரு மாதத்தில் வீட்டிற்கு மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும் என்று மின்சார வாரிய விதி இருக்கையில், இவ்வளவு காலதாமதம் ஏன் என மக்கள் கேட்கின்றனர்?
.

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து ஏழையின் வீட்டில் ஒளி ஏற்றி வைப்பார் என பொதுமக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
திருப்பராய்த்துறை வருவாய் கிராமம் நந்தவனத்தில் கடந்த 16 வருடமாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் மக்களுக்கு கிடைக்க வேண்டும் மின்சார இணைப்பையும் இதே உதவி மின் பொறியாளர் தான் என்ஓசி கேட்டு கிடப்பில் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது


