NTT TAMIL

Current Date and Time
Loading...

செய்தியாளர் ஸ்ரீ.கிருத்திகா நீலகிரி மாவட்டம்

வனத்துறையினரால் பெயரிடப்பட்ட பி.டி.12 யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க கூடலூர் வனத்துறை முடிவு

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே,நெலாக்கோட்டை பஜார் பகுதியில் உலா வரும், பி.டி.12 என்று அழைக்கப்படும் யானைக்கு ரேடியோ காலர் பொருத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

ஊட்டி மற்றும் கூடலூர் பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு மற்றும் பல்வேறு உள்ளூர் கிராம பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது நெலக்கோட்டை சாலை.

சாலையை ஒட்டி குடியிருப்புகள் மற்றும் அதன் அருகே தனியார் வனப்பகுதி அமைந்துள்ளது.

அதனை ஒட்டி விலங்கூர் மற்றும் அவுன்டேல் கிராமம், தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது.

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேறும் யானைகள், இந்த கிராமங்களை ஒட்டிய புதர் பகுதிகளில் முகாமிட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. இதில் பி.டி.12 என்று அழைக்கப்படும் ஆண் யானை, பகல் நேரங்களில் குடியிருப்புகளை ஒட்டிய புதரில் படுத்து ஓய்வு எடுக்கும் நிலையில், இரவு 7 மணிக்கு மேல் பஜார் பகுதி சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உலா வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த சாலையில் பயணம் செய்த, 6-க்கும் மேற்பட்ட வாகனங்களை தாக்கி சேதப்படுத்தியதில், வாகனங்களில் பயணித்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.இந்த யானையை கும்கி யானைகள் உதவியுடன் மயக்க ஊசி செலுத்தி பிடித்துச் செல்ல வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தொல்லை தரும் யானைகளை பிடித்தால், அதனை எந்த பகுதியில் கொண்டு போய் விடுவது என்பது கேள்விக்குறியாக மாறி உள்ளது.

பிற மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் இந்த யானைகளை விடுவிக்க மறுக்கப்படும் நிலையில், உள்ளூர் வனத்துறையினர் பல்வேறு வகையிலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதனால் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் பி.டி.12 என்ற யானையின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், அதற்கு ரேடியோ காலர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக தென்னாப்பிரிக்காவில் இருந்து, ரேடியோ காலர் வரவழைக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவு கிடைத்தவுடன் பணிகள் துவங்கும்.அதன் மூலம் யானை வனப்பகுதியில் இருந்து, வெளியேறும்போது தகவல் கண்காணிப்பு அறைக்கு தெரிவிக்கப்பட்டு, யானை வனத்திலிருந்து வெளியேறாமல் தடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

மேலும் ஜியோ பென்சிங் முறையும் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Related Posts

POST MY ADD